![PM Modi has said that India will stand by Israel in its difficult times](http://image.nakkheeran.in/cdn/farfuture/IOcwLwV7iCdlU-JNfOLl7kQKqUToNnHHwF5gSi-xWZI/1696944540/sites/default/files/inline-images/993_91.jpg)
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த பொதுமக்கள் பலரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இதற்கு கடுமையான பதிலடிகளை இஸ்ரேல் தரப்பு கொடுத்து வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளை இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் ஆதரவு தெரிவித்துள்ள பிரதமர் மோடிக்கு செல்போனியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு போர் நிலவரம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேட்டு அறிந்துகொண்டேன். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.