70 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் விழுந்ததில் 17 பேர் பலியான சம்பவம் நேபால் நாட்டில் நடந்துள்ளது.

நேபாள நாட்டின் டோலாகா மாவட்டத்தில் இருந்து தலைநகர் காத்மாண்டுவுக்கு நேற்று முன்தினம் 70 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. அப்போது சிந்துபால்சவுக் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 165 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.
சாலையிலிருந்து 165 அடி ஆழத்தில் உள்ள சன்கோஷி ஆற்றுக்குள் பேருந்து விழுந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனே மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மீட்பு படைக்கும் தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் 3 மாத பச்சிளம் குழந்தை மற்றும் 6 சிறுவர்கள் உள்பட 17 பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். மேலும் 56 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.