மியான்மரில் ரோஹிங்யாக்கள் குறித்து பேச மறுத்த போப் பிரான்சிஸ்!
மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், அங்கு சித்தரவதைகளை அனுபவித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றிய விவகாரம் குறித்து குரல் எழுப்பாததது மனித உரிமைகள் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் நாட்டில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு மூத்த அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சியுடன் மேடையில் இருந்த போப் பிரான்சிஸ், மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ரோஹிங்யாக்கள் என்ற வார்த்தையை ஒருமுறைகூட பயன்படுத்தவில்லை. ஆனால், உலகில் உள்ள அனைத்து இனங்களுக்கும் நாம் மதிப்பளிக்க கடமைப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டார்.
ரோஹிங்யா என்ற வார்த்தையை மியான்மர் அரசு பயன்படுத்துவதில்லை என சொல்லப்படுகிறது. ஆனால், போப் பிரான்சிஸ் பல இடங்களில் ரோஹிங்யாக்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். மியான்மரில் ரோஹிங்யாக்கள் மீதான தாக்குதல் நடக்கும் சமயத்தில், அதுகுறித்து போப் குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோஹிங்யா என்ற வார்த்தையையே அவர் பயன்படுத்தாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.