ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீ விபத்தில் 42-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் சப்போரோ நகர தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.