டென்னிஸ் பந்துகளை போட்டு வைப்பதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெண்கல கிண்ணம் ஒன்று இந்திய மதிப்பில் 34 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அதிசயம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப் பயணம் செய்த போது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கலக் கிண்ணத்தை வாங்கி வந்துள்ளனர். அதனை வாங்கிய நிலையில் அது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணம் என் அவர்களுக்கு தெரியவர, அதனை நல்ல விலைக்கு விற்க முயற்சித்துள்ளனர்.
இதற்காக பல இடங்களில் கேட்டும் யாரும் அதனை வாங்க முன்வரவில்லை. பின்னர் இதனை ஏலம் விட முயற்சித்த போதும் எந்த ஏல நிறுவனமும் இதனை விற்க முன்வரவில்லை. எனவே வேறு வழியின்றி இந்த கிண்ணத்தை வீட்டில் டென்னிஸ் பந்துகள் வைக்க பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்தக் கிண்ணத்தைப் பற்றி இடைத்தரகர்கள் மூலமாக கேள்விப்பட்ட ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் அக்குடும்பத்தினரிடம் இருந்து வெண்கலக் கிண்ணத்தை வாங்கியது. கிண்ணத்தின் மதிப்பை அறிந்த இந்த நிறுவனம், அதனை நேரடியாக ஹாங்காங் எடுத்து சென்று அங்கு ஏலம் விட்டது. இதில் அந்தக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
இத்தகவலை ‘கொல்லெர்’ ஏல நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. டென்னிஸ் பந்துகள் போட வைத்திருந்த அந்த கிண்ணம் 34 கோடிக்கு ஏலம் போயுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.