
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது, ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது.
இதேபோன்று வணிக நிறுவனங்கள், ஊடகங்கள் உள்ளிட்டவற்றுக்குத் தாலிபான் அரசு பல்வேறு கடுமையான சட்டங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில், ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு தாலிபான் அரசின் அறநெறிச் சட்டங்களைச் செயல்படுத்தும் அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அந்த, தாலிபான் அரசின் சட்டப்பிரிவு 17ன் படி, உயிருடன் இருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளில் புகைப்படத்தை ஊடகம் மற்றும் தொலைக்காட்சிகளில் காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், மீறிய காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.