Skip to main content

கரோனா தடுப்பூசியால் பின்விளைவு? எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைப்புகள்! 

Published on 17/12/2020 | Edited on 17/12/2020
pfizer vaccine

 

 

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு, டிசம்பர் 2- ஆம் தேதி, பிரிட்டனும், டிசம்பர் 4- ஆம் தேதி பஹ்ரைனும் அனுமதி வழங்கின. அதனைத்தொடர்ந்து, பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு கனடா, அமெரிக்கா, குவைத், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

 

இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இந்தநிலையில் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், சுகாதார பணியாளர் ஒருவருக்கு, கரோனா தடுப்பூசி போடப்பட்டதும் அவருக்கு அலர்ஜிக்கான கடுமையான அறிகுறிகள் தோன்றியுள்ளன. இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கை பிறகு அவர் நன்றாக குணமடைந்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கு முன்பு, இங்கிலாந்து நாட்டில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு பிறகு, இருவருக்கு அலர்ஜி அறிகுறிகள் தோன்றியுள்ளன. அதன்பிறகு, இங்கிலாந்து நாட்டின் மருத்துவ ஒழுங்குமுறையாளர், ஏற்கனவே அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள், உணவு மற்றும் மருந்துகளால் அலர்ஜிக்கு உள்ளாகுபவர்கள், பைசர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவித்திருந்தது. ஆனால், அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அலர்ஜி பாதிப்பு உள்ளவர்களும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்றும், ஏற்கனவே வேறு தடுப்பூசியால் அலர்ஜிக்கு ஆளானவர்கள் பைசர் தடுப்பூசியை போட்டுகொள்ளக்கூடாது என கூறியிருந்தது.

 

அமெரிக்காவில் தடுப்பூசிக்கு பிறகு, அலர்ஜி அறிகுறியால் பாதிக்கப்பட்டவருக்கு இதற்கு முன்பு அலர்ஜி ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்