Published on 01/05/2020 | Edited on 01/05/2020

அமீரகத்திலிருந்து இந்தியா திரும்ப இரண்டு நாட்களில் 32 ஆயிரம் பேர் இணையம் வழியாக பதிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக உலகின் பல நாடுகளில் வான்வழி போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள சூழலில், வெளிநாடுகளுக்கு சுற்றுலாவுக்காக சென்றவர்கள், பணி நிமித்தமாக சென்றவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் வேற்றுநாடுளில் சிக்கித் தவித்து வருகின்றனர். அந்த வகையில் அமீரகத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பலரும் கரோனா ஊரடங்கால் பணிக்கும் செல்ல முடியாமல், இந்தியாவிற்கும் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனையடுத்து, அமீரகத்தில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மீண்டும் நாடு திரும்ப உதவும் வகையில், அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் இணையதளம் ஒன்றைத் துவக்கியது.
இந்தியா செல்ல விரும்பும் இந்தியர்கள் இந்த இணையத்தளத்தில் பதிவு செய்தால், அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இந்தியா அனுப்பிவைக்கப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த இணையதளம் துவங்கப்பட்ட இரண்டே நாட்களில் 32,000க்கும் மேற்பட்டோர் இந்த இணையதளத்தில், இந்தியா வருவதற்காக பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்ததால் திடீரென கோளாறு ஏற்பட்டுச் செயலிழந்தது. பின்னர் அது சரிசெய்யப்பட்டு பதிவுகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து துபாயில் உள்ள துணைத் தூதர் விபுல் நிருபர்களிடம் கூறுகையில், "இதுவரை 32 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் விவரங்கள் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படவில்லை. இந்தியர்கள் அனைவரும் தாயகம் செல்ல விருப்பமாக இருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால், இப்போதுள்ள சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளை மனதில் வைத்துத்தான் முடிவு எடுக்கப்படும். உடல்நலம் பாதித்தவர்கள், முதியோர், கர்ப்பிணிகள், குழுவாக சிக்கியிருப்பவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து முதலில் அனுப்பிவைக்கத் திட்டமிட்டு வருகிறோம். இவர்களை அழைத்து செல்ல ஏர் இந்தியா விமானங்கள் பயன்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.