
கரோனா பரவலைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கஞ்சா உள்ளிட்டவற்றை போதைக்காகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களைக் கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த மோகன் நாயர், தன் வீட்டில் யூட்யூப் சேனல் பார்த்து குக்கரை வைத்து சாராயம் காய்ச்சி அதனை அருகில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்ததாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நோட்டமிட, விளையாட்டு மைதானத்தில் மோகன் நாயர் சாராயத்தை விற்பனை செய்யும்போது கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் வீட்டில் சோதனையிட்டபோது குக்கர் மற்றும் மது பாட்டில்களில் சாராயத்தைக் காய்ச்சி அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்தது உறுதியானது.
இதையடுத்து அவரை கைது செய்தபோது, “நான் என்ன தப்பு பண்ணினேன்? சாராயம் காய்ச்ச யூடியூப் சொல்லிக் கொடுத்தது, அதன்படி செய்தேன்” என கூறியுள்ளார். அவர் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருள்கள், 2 லிட்டர் கள்ளச் சாராயம், 1.75 லிட்டர் ஊறல் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.