Skip to main content

வீட்டுக்குள் புகுந்த இளம்பெண்; மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

The young woman who entered the house; Cruelty to the old woman

 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கொல்லங்குடி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. 70 வயதான இவர், தனது கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், லட்சுமிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேற்படி இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில், மூதாட்டி லட்சுமி கொல்லங்குடியில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 

மேலும், வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டி லட்சுமியை அவரது மகன்களும் மகளும் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 3 ஆம் தேதியன்று மூதாட்டி லட்சுமி தனது உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதியம் ஒரு மணியளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அந்த நேரத்தில், மூதாட்டி லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

 

இத்தகைய சூழலில், சிறிது நேரம் கழித்து 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மூதாட்டி லட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, நீங்கள் யார் என்று லட்சுமி அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு, தான் உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வாங்கிக் கொடுக்க வந்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், நீங்கள் கைம்பெண்ணாக இருந்தால் கூடுதலாக 500 ரூபாய் பெற்றுத் தருவதாகக் கூறி தொடர்ந்து பேச்சு கொடுத்துள்ளார்.

 

ஒருகட்டத்தில், இதை நம்பிய மூதாட்டி லட்சுமி அந்த பெண்ணை வீட்டுக்குள் அழைத்து அமர வைத்துள்ளார். இதற்கிடையில் மூதாட்டி லட்சுமி, மதகுபட்டி ராமலிங்கபுரத்தில் உள்ள அவரது மகள் மல்லிகாவை செல்போனில் அழைத்து, “இங்க வெரிஃபிகேஷனுக்கு வந்திருக்காங்க மா... ஆயிரம் ரூபாய் தருவாங்களாம்... நீயும் இ-சேவை மையத்துல பதிவு பண்ணு. உனக்கும் பணம் கொடுப்பாங்க. பேத்திய அனுப்பி என்னன்னு பாக்க சொல்லு...” என வெளியூரில் இருக்கும் தனது மகளிடம் இதுகுறித்து பேசியுள்ளார். மேலும், வீட்டுக்குள் புகுந்த அந்த பெண்ணிடமும் லட்சுமியின் மகள் பேசியுள்ளார். 

 

இதையடுத்து, மூதாட்டி லட்சுமியிடம் அடையாள அட்டைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளம்பெண், அந்த பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்துள்ளார். அந்த நேரத்தில், அப்பகுதி முழுவதும் ஆள் நடமாட்டம் இல்லாததைத் தெரிந்துகொண்டு அந்த பெண் ஒரு அதிர்ச்சி திட்டத்திற்கு தயாராகியுள்ளார். ஆனால், அந்த மூதாட்டி சிறு பிள்ளை போல் அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த அந்த பெண் மூதாட்டி லட்சுமி அணிந்திருந்த 30 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

 

ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி அந்த பெண்ணைத் தடுத்து நிறுத்திவிட்டு கூச்சலிடத் தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து உடனடியாகத் தப்பிக்க வேண்டும் என முடிவு செய்த அந்த பெண், மூதாட்டியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும், இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய சூழலில், சிறிது நேரம் கழித்து உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூதாட்டி லட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கத்திக் கூச்சலிடவே அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடினர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகங்கை டிஎஸ்பி சிபிசாய் சவுந்தர்யன் தலைமையிலான போலீசார், மூதாட்டி லட்சுமியின் வீட்டை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டனர்.

 

அதன்பிறகு, அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காளையார்கோவில் போலீசார் மூதாட்டி லட்சுமியை கொலை செய்தது யார் எனத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர் மூதாட்டியின் வீட்டுக்கு அருகே வந்து சென்றதும் அவரது கையில் ஒரு கட்டைப்பை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, விறுவிறுவென கிளம்பிய அந்த பெண் தொண்டி பேருந்தில் ஏறி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

 

அதே வேளையில், நகைகளைக் கொள்ளையடிக்கும்போது இவர்களுக்குள் நடந்த மோதலில் மூதாட்டி லெட்சுமி இறந்துவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். இத்தகைய சூழலில், சிசிடிவி காட்சிகள் காவல்துறைக்கு கிடைத்தாலும், அந்தப் பெண்ணை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது, போலீசார் திரட்டிய ஆதாரங்களை வைத்துக்கொண்டு தலைமறைவாகியிருக்கும் அந்த பெண்ணை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் காளையார்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் திணறி வரும் காவல்துறையினருக்கு இந்த மூதாட்டி கொலை வழக்கு மேலும் சவாலாக அமைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.