Skip to main content

தந்தையிடம் பேசிய சிறிது நேரத்தில் இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Young lady doctor passes away in perambalur

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் பிரியங்கா (28), எம்.டி படித்த இவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாகப் பணிபுரிந்து வந்தார். இவர் பெரம்பலூர் கல்யாண் நகரில் சதாசிவம் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

 

இந்நிலையில், வழக்கம் போல் பணிக்குச் சென்ற நேற்று மதியம் 1 மணிக்கு வீடு திரும்பிய டாக்டர் பிரியங்கா மதியம் 02.09 மணிக்கு அவரது தந்தையிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன்பின் அவரது சகோதரர் அழைத்துள்ளார். ஆனால், பிரியங்கா போன் எடுக்காததால் அச்சமடைந்த அவரது சகோதரர் உடனடியாக தனது தந்தைக்கு தகவல் சொல்லி நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். 

 

பெற்றோர் நேரில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்தாழ்ப்பாள் இடப்பட்டு பூட்டப்பட்டு இருந்ததால் பிரியங்காவின் தந்தை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் ஜன்னலில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு இறந்து தரையில் அமர்ந்த நிலையில் இருந்துள்ளார் பிரியங்கா. இது குறித்த தகவல் போலீஸுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சடலத்தைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இறந்த பெண் மருத்துவர் பிரியங்கா கடந்த வாரம் ஏழு நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்று வந்துள்ளார் என்றும், அறையில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுக்கும் மாத்திரைகள் இருந்ததும் போலீஸின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த டாக்டரின் தந்தைக்கு கடந்த 25 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்