
ஈரோடு மாவட்டம் ஆர்.என். புதூர் அமராவதி நகர், மகாத்மா டெக்ஸ் தெருவைச் சேர்ந்தவர் இந்துமதி (24). இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முருகேசன் கட்டடக் கூலித் தொழிலாளி.
இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் 12 மணி அளவில் இந்துமதி வீட்டில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது ஸ்டவ்வில் இருந்து எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது நெருப்பு பட்டதால் அலறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்துமதியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இரண்டு கை, வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்துமதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த இந்துமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.