Skip to main content

மகளிர் உரிமைத் தொகை கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்!

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Women suddenly blocked the road demanding magalir urimai thogai

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கடந்த 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்டு பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. சிலருக்கு கடந்த 14 ஆம் தேதி முதலே அவர்களது வங்கிக் கணக்கில் கலைஞர் உரிமைத் தொகையான ரூ. 1000 வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் கலைஞர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்த சிலருக்கு இன்னமும் பணம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மேல்முறையீடு செய்து உரிமைத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்து இருந்தது. 

 

இதையடுத்து இன்று காலை முதலே ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். அதில் சில பெண்கள் திடீரென வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள திருமகன் ஈவேரா சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதேபோல் ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

அப்போது பெண்கள் கூறுகையில், “நாங்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்திருந்தோம். இதுவரை எங்களுக்கு எந்த ஒரு எஸ்.எம்.எஸ். வரவில்லை. எங்கள் வங்கிக் கணக்கில் பணமும் வரவு வைக்கப்படவில்லை. நாங்கள் சாதாரண கூலி வேலை செய்பவர்கள். எங்கள் பகுதியில் பலருக்கும் உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டபோது, இன்று தாலுகா அலுவலகத்திற்கு வந்து விசாரித்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் நாங்கள் வேலையை விட்டு விட்டு தாலுகா அலுவலகத்திற்கு வந்தோம். இங்கு ஆன்லைன் செயல்படவில்லை என்கிறார்கள். நாங்கள் என்ன செய்யட்டும்?” என்றனர்.

 

Women suddenly blocked the road demanding magalir urimai thogai

 

இதற்குப் பதில் அளித்துப் பேசிய வட்டாட்சியர் ஜெயக்குமார், “விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும். உங்களுக்கு என்ன காரணத்துக்காக இதுவரை கிடைக்கவில்லை என்று பார்க்கலாம். உங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். உங்களுக்காகவே தாலுகா அலுவலகத்தில் 3 அதிகாரிகள் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அவர்களிடம் உங்களுக்கு என்ன சந்தேகம் உள்ளதோ அதைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுவரை பணம் ஏறாதவர்களுக்கு வரும் 23 ஆம் தேதிக்குள் பணம் அவர்களது வங்கிக் கணக்கில் ஏறிவிடும். உங்கள் பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம்” என்றார். இதனை ஏற்றுப் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.