Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; சினிமா பாணியில் பெண் அரங்கேற்றிய கொலை 

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
 woman who incident her boyfriend in a cinematic style

திருவள்ளூர் மாவட்டம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரியா. இவருக்கு லட்சுமணன் என்பவருடன் திருமணமாகிப் பல வருடங்களாகக் குடும்பம் நடத்தி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவர் லட்சுமணனுடன் பிரியாவிற்கு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டதால் கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பொன்னேரி பாலாஜி நகரைச் சேர்ந்த கோபி(எ) கோபாலகிருஷ்ணன் என்பவருடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோபி தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பிரியாவுக்கு கோபியுடன் இருந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனியாக வீடு எடுத்து தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான் பிரியா கோபியின் வீட்டிற்கு நேற்று இரவு சென்றுள்ள நிலையில் அங்கு கோபி இல்லை. இதனால் அவரது உறவினர்களிடம் தகராறு செய்து தகாத வார்த்தையில் திட்டிய பிரியா, இன்னும் ஒரு மணி நேரத்தில் காலி செய்துவிடுவேன் என்று மிரட்டி விட்டு திரும்பியுள்ளார்.

கோபி வீட்டுக்கு வந்தவுடன் நடந்த சம்பவத்தை அவரிடம் தெரிவித்த உறவினர்கள், அந்த பெண் யார் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் நான் போய் கேட்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து திருவாய்ப்பாடி பகுதியில் நின்று கொண்டிருந்த கோபியை, அங்கு நான்கு பேருடன் வந்த பிரியா, “இதோ நிற்கிறான் அவனை வெட்டுங்கள்” எனக் கூறியுள்ளார். அதன் பின் அவர்கள் சினிமா பாணியில் கோபியை ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கோபியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கோபி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரியாவை கைது செய்துள்ளனர். அதோடு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பிச் சென்றவர்களைப் பிடிக்கும் பணியிலும் தீவிரமாக போலீசார் இறங்கியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்