
ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரையிலும் 734 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அந்த உயிரிழப்பு வரிசையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு தனது கணவர் இறந்து ஒரு ஆண்டு கழித்து அதே நாளில் அவர் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட துயரமான சம்பவம் ஒன்று ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ளது.
சத்தியமங்கலத்தையடுத்த கொமரபாளையம் கிராமம் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சாந்தி(45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பழனிச்சாமிக்கு சென்ற ஆண்டு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி பரிதாபமாக இறந்தார். அன்று முதல் சாந்தி, கணவரின் நினைவாகவே இருந்துள்ளார். கணவன் மறைவுக்கு பிறகு சாந்தி, தனது மகன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 7ந் தேதி காலை சாந்தி வாந்தி எடுத்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது மகன் தாயிடம் விசாரித்தபோது “அப்பா கரோனா காரணமாக இறந்த இதே நாளில் நானும் சாக முடிவெடுத்து விஷம் குடித்து விட்டேன்” என கூற, அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் கார் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தாய் சாந்தியை சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். கரோனா தாக்கம் காரணமாக இறந்த கணவரின் நினைவு நாளில் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.