
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த இக்கரை நிகமம் புதூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி வெண்ணிலா(38). இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். பொன்னுசாமி லோடு வாகன டிரைவராக உள்ளார். வெண்ணிலா விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று புது வடவள்ளி பட்டவர்த்தி அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தட்டி அறுக்கும் வேலையில் வெண்ணிலா ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலது கால் பாதத்தின் மேல் அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வெண்ணிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.