Skip to main content

"வேலைக்குச் சென்ற கணவரை காணவில்லை" - பெண் பகீர் புகார்!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

வேலைக்குச் சென்ற தன் கணவரைக் காணவில்லை என்று பெண் ஒருவர் வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

woman complained at police station that husband missing

 

ஈரோடு சம்பத்நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வருபவர் துரைசாமி(40). இவரது மனைவி சிவாம்பிகை. துரைசாமி கோவையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் கோவை தெற்கு அலுவலகத்தில் வழக்கு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 

சென்ற நவம்பர் 11ஆம் தேதி மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால்  இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. வேலைக்கு போகும் துரைசாமி வழக்கமாக சில நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவாராம். அதனால் அவர் வந்து விடுவார் என குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் துரைசாமி வீடு திரும்பவில்லை. 

அவருடைய செல்போனும் சுவிச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து துரைசாமியை காணாமல் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் அவர் எங்கு சென்றுள்ளார் என்பது அவரது நண்பர்களுக்கே தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து மனைவி சிவாம்பிகை நேரில் போய் கோவை தெற்கு அலுவலகத்தில் விசாரித்துள்ளார். அப்போதுதான் தெரிய வந்துள்ளது துரைசாமி வேலைக்கு போயே இரண்டரை மாதமாகிறது என்பது.

இதனை தொடர்ந்து தனது கணவரை காணவில்லை என சிவாம்பிகை  ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் துரைசாமி எங்கு சென்றார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்