![Whose left hand was lying in the garbage?](http://image.nakkheeran.in/cdn/farfuture/JLc5Jqkk7lZD7VjW6_slIJgIdLHRj22Dxt9JIyEchrA/1663673700/sites/default/files/inline-images/n1116_0.jpg)
கோவை மாவட்டம் துடியலூர் அருகே வெள்ளக்கிணறு என்ற பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் இடது கை ஒன்று கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த கை யாருடையது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள விஎஸ்.கே நகர் பகுதியில் கடந்த 15 ஆம் தேதி காலை வாகனத்தின் மூலம் தூய்மைப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்கள் குப்பையில் மனிதனின் கை மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த நபரின் மற்ற உடல் பாகங்கள் இதேபோல் அருகில் உள்ள குப்பைமேடுகளில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குப்பை தொட்டியில் ஆணின் இடது கை கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கை ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரபு என்பவரின் கை என்பது விசாரணையில் தெரியவந்தது.
கோவை சரவணம்பட்டியில் தங்கி அழகுநிலையத்தில் பணியாற்றிவந்த பிரபு கடந்த 14 ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது மனைவி புகாரளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குப்பையில் இருந்த கை காணாமல் போன பிரபுவின் கை என்பதை உறுதி செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தற்பொழுதுவரை பிரபுவின் மற்ற உடல் பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லது கையை இழந்த நிலையில் அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற தகவலும் தெரியாத நிலையே உள்ளது.