Skip to main content

குற்றவாளியின் அண்ணன் மீது சரமாரி தாக்குதல்? போலீசாரின் செயலால் கதறும் இளைஞர்!

Published on 29/07/2024 | Edited on 29/07/2024
While going to catch the criminal,  police assaulted  brother of accused

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு, திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (39). இவர் கடந்த மாதம் 22.06.2024 அன்று வாணியம்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகத் தனது மனைவியுடன் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மின்னூர் அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் குப்புசாமியின் செல்போனை பிடுங்கிக் கொண்டு அதிவேகமாகச் சென்றுள்ளனர். இதில் செல்போனை பறிகொடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த குப்புசாமி மற்றும் அவரது மனைவி சிறு காயங்களுடன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆம்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் நேற்று வாணியம்பாடி பகுதியில் குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற போது செல்போன் வழிபறியில் ஈடுபட்டது வாணியம்பாடி கோனாமேடு பகுதியைச் சேர்ந்த ஜெகன் (20) மற்றும் நூருல்லாபேட்டை, விஎம்சி காலணி பகுதியைச் சேர்ந்த திவாகர்(21) எனத் தெரியவந்தது. அதனடிப்படையில், இருவரையும் கைது செய்யச் சென்றபோது கோனாமேடு ஜெகனின் அண்ணன் சாரதி என்பவரை ஆம்பூர் குற்றப்பிரிவு போலீசார், “உன் தம்பி எங்கே இருக்கான்..” எனக் கேட்டறிந்து சரமாரியாகத் தாக்கியதில் கை மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடக்க முடியாத சூழலில் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்று சாரதி குற்றப்பிரிவு போலீசார் செய்தது குறித்து அழுது புலம்பியுள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்  செல்போன் வழிபறியில் ஈடுபட்ட ஜெகன் மற்றும் திவாகர் மீது ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், குற்றப்பிரிவு போலீசாரால் தாக்குதலுக்கு ஆளான இளைஞரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் 

மேலும் குற்றப்பிரிவு போலீசாரிடம் தாக்குதலுக்கு ஆளான இளைஞர் அழுது புலம்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சட்டத்தை மீறி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய குற்றப்பிரிவு போலீசார் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்While going to catch the criminal,  police assaulted  brother of accused

சார்ந்த செய்திகள்