Skip to main content

களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சிறந்த மாடுபிடி வீரராக இருவர் தேர்வு...

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

avaniyapuram jallikattu summary

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் போட்டிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர்  போட்டியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இதையடுத்து மாலை 4 மணிவரை எட்டு சுற்றுகள் நடைபெற்றது. இதில் 523காளைகளும், 420 மாடுபிடி வீரர்களும் களம்கண்டனர்.  போட்டியின் முடிவில் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற மாடுபிடி வீரரும் முத்துபட்டி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற மாடுபிடி வீரரும் தலா 26 காளைகளை அடக்கியதாக இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களாகத் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுதொகையாக ஒரு லட்ச ரூபாய் பகிர்ந்து வழங்கப்பட்டது 

 

சிறந்த காளையாக மதுரையைச் சேர்ந்த ஜி்.ஆர். கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான காளை தேர்வு செய்யப்பட்டு பைக் மற்றும் 1லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

 

போட்டியில் முடிவில் மாடு பிடி வீரர்கள்: 47 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 11 பேர், பார்வையாளர் இருவர் என 60 பேருக்குக் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே போட்டியில் கலந்துகொள்வதற்காக வந்த தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்று கயிறு இறுகியதால் உயிரிழந்தது

 

முன்னதாக போட்டியினை அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேரில் கண்டுமகிழ்ந்து மாடுபிடி வீரர்களுக்குத் தங்கக் காசு உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். அப்போது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர். 

 

இந்த போட்டியின் நடுவே 6வது சுற்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மாடுபிடி வீரர்களாக வந்த வீரகுல அமரன் இயக்க நிர்வாகிகளான திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த வினோத், அவனியாபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி ஆகிய இருவரும் அவனியாபுரம் வாடிவாசல் முன்பாக வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடியைக் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனிடையே வாடிவாசல் அருகே காளை அவிழ்க்கும் இடத்தில் காளையை வரிசையில். அவிழ்ப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மதுரை கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்த அருண்குமார்(27), தேவேந்திரன் (25). ஆகிய இருவரையும் கத்தியால் குத்தியதில் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

கீழக்கரை ஜல்லிக்கட்டு நிறைவு; முதலிடம் பிடித்த அபி சித்தர்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Completion of lower bank jallikattu; Abhi Siddhar topper

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை இன்று (24.01.2023) திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக மாடு பிடி வீரருடன் கூடிய ஜல்லிக்கட்டு காளை மாட்டு சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் ஐ. பெரியசாமி எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் சிலையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

vck ad

தொடர்ந்து அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் தற்பொழுது போட்டியானது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் 10 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். தலா 6 காளைகளை அடக்கி சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன், பரத் ஆகிய இருவர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முதல் பரிசாக மஹிந்திரா தார் கார் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட உள்ளது. அண்மையில் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல் செய்யப்பட்டதாகவும், இதற்கு முழுக்க முழுக்க அமைச்சர் தான் காரணம் எனவும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர்  குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.