Skip to main content

'ஜிலேபி சாப்பிட்டுவிட்டு சண்டை போடவில்லை'-வானதி சீனிவாசன் விளக்கம்

Published on 13/09/2024 | Edited on 13/09/2024
BJP

கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ சீனிவாசன் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கையுடன் கேள்விகளை முன் வைத்தார்.

''உங்கள் பக்கத்தில் இருக்கிற எம்எல்ஏ (வானதி ஸ்ரீனிவாசனை குறிப்பிட்டு) எங்கள் ரெகுலர் அன்னபூர்ணா கஸ்டமர். வரும் போதெல்லாம் சண்டை போடுகிறார்கள். ஸ்வீட்டுக்கு 5% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள் இன்புட் கொடுக்கிறீர்கள். உணவுக்கு 5% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள் இன்புட் கிடையாது. காரத்திற்கு 12% வைத்திருக்கிறீர்கள். பேக்கரியில் உள்ள பிரட், பன்னை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றுக்கும் 28% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள். இந்த அம்மா வர வேண்டியது ஜிலேபி சாப்பிட வேண்டியது. அடுத்தது காபி கொடுக்கணும். காரம் வேண்டும் என்பது. காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்று சொன்னால் உடனே சண்டைக்கு வருவது. இது டெய்லி எங்களுக்கு நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு ஃபேமிலிக்கு டிஃபரண்ட் டிஃபரண்டாக ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. அதே நேரம் பன்னுக்குள்ள கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி கொடுக்க வேண்டும். கஸ்டமர் என்ன சொல்கிறார்கள் என்றால் 'கிரீமையும் ஜாமையும் கொண்டு வா நானே பன்னுக்குள் வைத்துக் கொள்கிறேன்' என்கிறார்கள். கடை நடத்த முடியல மேடம். அதனால் ஒன்றாக எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி ஜாஸ்தி செஞ்சுருங்க'' என கொங்கு தமிழில் கோரிக்கை தெரிவித்திருந்தார். இதனை கேட்டு அரங்கம் சிரித்தது.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பேசியதோடு எம்.எல்.ஏ தன் உணவகத்திற்கு வந்து ஜிலேபி சாப்பிட்டு விட்டு சண்டை போடுவது குறித்தும் ஹோட்டல் சங்க நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்த, இதுகுறித்து அவர் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து கோவை காந்திபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், ''தர்மசங்கடப்படுத்திவிட்டதாக உணவக உரிமையாளர் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டார். இன்றைக்கும் பெண்களுக்கு சம வாய்ப்புகள் சமம் மரியாதைகள் இருக்கிறதா என்று கேட்டால் ஒரு பெண் அரசியல்வாதியாக இல்லை என்று சொல்வேன். ஆனால் அதற்காக 'அய்யோ நான் பெண் எனக்கு எந்த சலுகையும் கொடுக்கவில்லை. நான் பெண் அரசியல்வாதி என் மேல் இரக்கம் காட்டுங்க; கருணை காட்டுங்கள்' என்று சொல்ல வரவில்லை.

BJP

அதே மேடையில் ஒரு ஆண் அமைச்சர், ஆண் எம்எல்ஏ இருந்தால் இப்படி மாதிரியான பேச்சுக்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். கோயம்புத்தூரை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர், மிக நீண்ட அனுபவம் கொண்டவர். அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். எனக்கு சகோதரர் மாதிரி. ஜிஎஸ்டி பற்றி ஒரு சில கருத்துக்களை தெரிவிக்கிறார். காரத்திற்கு தனியா, சுவீட்டுக்கு தனியா ஜிஎஸ்டி இருக்கிறது என பேசுகிறார். ஜிஎஸ்டி பற்றி என்ன குறைகள் இருந்தாலும் பேசுவதற்கு தான் அமைச்சர் வந்திருக்கிறார். அவரிடம் ஒரு கருத்தை சொல்கிறார். அவர் பேசுகின்ற பொழுது ''இந்த எம்எல்ஏ அம்மா என் கடைக்கு வருவாங்க. ஜிலேபி சாப்பிடுவாங்க. அப்புறம் காபி குடிப்பாங்க சண்டையும் போடுவாங்க. இந்த மாதிரி  பேசினார். நாங்கள் இம்மீடியட்டா அந்த இடத்தில் ரியாக்ட் பண்ண வில்லை. நான் கேட்டிருக்க முடியும் நான் உங்க கடைக்கு எத்தனை முறை வந்திருக்கிறேன். இல்லை எத்தனை முறை ஜிலேபி சாப்பிட்டிருக்கேன். நான் உங்க கடையில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை' என நான் மேடையிலே சொல்லி இருக்க முடியும். நான் அதை விரும்பவில்லை. ஏனென்றால் அது ஒரு பொதுமேடை.

தொடர்ந்து  எனக்கு போன் செய்கிறார். நான் தவறாக பேசி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் நான் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் நான் இப்பொழுதே வருகிறேன் மன்னிப்பு கேட்க டைம் கொடுங்கள் என்று கேட்கிறார்.

மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம் என்று சொன்னோம். ஹோட்டலில் மதிய உணவு முடித்த பின்பு அவர் வருகிறார். தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டேன். சோசியல் மீடியாவில் வேற மாதிரி போய்விட்டது என்றார். ஒரு வாடிக்கையாளர் உங்கள் கடையில் வந்து என்னென்னவெல்லாம் சாப்பிட்டார் என்று சொல்லலாமா? அது முறையா? உங்கள் ஹோட்டலுக்கு அடுத்தமுறை 10 பேர் சாப்பிட வந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று தோணாதா? என்று தான் அமைச்சர் கேள்வி எழுப்பினார். நாங்கள் மிரட்டி கொண்டு வந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக சொல்கிறார்கள். காங்கிரஸ், திமுகவில் ஒரு தொழிலதிபரை கூட்டிட்டு வந்து ஆணவத்தில், அதிகாரத்தில் மன்னிப்பு கேட்க வைப்பீர்களா? என்றெல்லாம் சொல்லி நிறைய விஷயங்கள் போய் கொண்டு இருக்கிறது. இதில் ஜாதியை வேற இழுக்கிறார்கள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்