கரோனோ பாதிப்பால் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சென்னையில் சாலைகளில் வசிப்போரும், ஆதரவற்றோரும் உணவுக்காக மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் பல்வேறு தனியார் அமைப்புகள், அரசியல் கட்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன. இதைப்போல்,

சென்னை, பெரம்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், பாஜக சார்பில் தினமும் ஆயிரக்கணக்கான ஏழை, எளியோருக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. வடசென்னை மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி ஏற்பாட்டின் பேரில் இந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு, சென்னையில் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மாநில நிர்வாகிகள் வி.எஸ்.ஜே.சீனிவாசன், நீல முரளி யாதவ் ஆகியோர் மேற்பார்வையில் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் இந்த சாப்பாடு பொட்டலங்களை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று ஏழை மக்களுக்கு விநியோகித்து வருகிறார்கள். மேலும் முக கவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவையும் ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


இதுபோலவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் ஏழை, எளியோருக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. வட சென்னையை சேர்ந்த மயான ஊழியர்கள் சார்பிலும், தினமும் கடற்கரை மற்றும் கோட்டை ரயில் நிலையங்கள் அருகே சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இடர்பாடான இந்த நேரத்திலும் அன்னதானம் வழங்கி வருவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.