Skip to main content

பாலம் கட்டக் கோரி வெள்ள நீரில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்! 

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

Villagers standing in flood waters demanding construction of a bridge

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் உள்ளது ஆவினங்குடி. இங்கிருந்து வடக்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சாத்தநத்தம், நாவலூர். இந்த இரு ஊர்களுக்கும் இடையே வெலிங்டன் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படும் தண்ணீரோடு மழை நீரும் சேர்ந்து பெரிய ஓடையாக விரிவடைந்து சென்று மணிமுத்தாற்றில் கலக்கிறது. மேற்படி சாத்தநத்தம் - நாவலூர் ஆகிய இரு ஊர்களுக்கும் இடையில் ஓடையின் குறுக்கே ஒரு தரைப்பாலம் உள்ளது. அந்த தரைப் பாலமும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

 

மழைக் காலங்களில் இந்த இரு ஊர் மக்கள் மட்டுமல்ல, பல்வேறு ஊர்களுக்கும் செல்பவர்கள் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தைக் கடந்து செல்ல முடியாமல் சுமார் 40 ஆண்டுகளாக மிகுந்த சிரமப்படுகிறார்கள். இதனால் மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் செல்லும்போது போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். இந்நிலையில், இந்த ஓடையின் குறுக்கே மேம்பாலம் அமைக்கக் கோரி சுமார் 40 ஆண்டுகளாகப் பல்வேறு மனுக்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பியும், போராட்டங்களை நடத்தியும்வருகிறார்கள் இப்பகுதி மக்கள். இந்நிலையில், தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் ஓடையில் ஓடும் வெள்ள நீரில் குறுக்கே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தண்ணீரில் இறங்கி காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

 

Villagers standing in flood waters demanding construction of a bridge

 

தகவலறிந்த மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தண்டபாணி, சண்முக சிகாமணி, திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, ஆவினங்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களது கோரிக்கைகள் குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளனர். போர்க்கால அடிப்படையில் சாத்தநத்தம் - நாவலூர் இடையே மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியமானது, அவசரமானது என்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.