Skip to main content

ஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் வீடியோ பதிவை உறுதி செய்த தடய அறிவியல் நிபுணர்!

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
y


சாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் வாட்ஸ்அப் வீடியோ காட்சியும், குரலும் கோகுல்ராஜ் உடையதுதான் என்று சென்னை தடய அறிவியல் நிபுணர் திருநாவுக்கரசு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 4, 2019) வாக்குமூலம் அளித்தார்.


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 


வழக்கு விசாரணை காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் அமுதரசு என்பவர் பிணையில் வெளியே சென்றபோது தலைமறைவாகிவிட்டார். ஜோதிமணி என்பவர் கொல்லப்பட்டார். மற்ற 15 பேரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரணையின்போது ஆஜராகி வருகின்றனர். நீதிபதி இளவழகன் முன்னிலையில் சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. 


திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 4, 2019), கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) செந்தில்குமாரிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ குறுக்கு விசாரணை செய்தார். அதையடுத்து, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வக துணை இயக்குநர் திருநாவுக்கரசு அரசுத்தரப்பில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 

 

a


கோகுல்ராஜ் கொலை நடந்த காலக்கட்டத்தில், அவரே பேசி வெளியிட்டதாக ஒரு வீடியோ காட்சி, வாட்ஸ்அப்களில் வெளியானது. அந்தக் காட்சியில், 'பெண்கள் எல்லோரும் பொய்யானவர்கள். என்னைப்போல் யாரும் பெண்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம். ஒரு பெண்ணை நம்பி நான் ஏமாற்றப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறேன்,' என்று பேசிய ஒரு வீடியோ காட்சி வெளியானது. 


அந்த வீடியோ காட்சியின் உண்மைத்தன்மை அறிவதற்காக சென்னையில் உள்ள மாநில தடய அறிவியல் ஆய்வகத்திற்கு சிபிசிஐடி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அதை ஆய்வு செய்த துணை இயக்குநர் திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினர், வீடியோ காட்சியும், அதில் பேசும் குரலும் கோகுல்ராஜ் உடையது என்பதை உறுதி செய்தனர். அந்த தகவலை அவர் 4.2.2019ம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் வாக்குமூலமாக கூறினார். 


'சர்ச்சைக்குரிய அந்த வாட்ஸ்அப் வீடியோ காட்சியை கோகுல்ராஜ் ஒருவர் மட்டுமே பதிவு செய்திருக்க முடியாது. மூன்றாவது நபர் ஒருவர் மூலமாகத்தான் அந்தக் காட்சிகள் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், கோகுல்ராஜ் பேசும்போது ஏதோ ஒருவித அச்ச உணர்வுடன் அடிக்கடி எச்சில் விழுங்குகிறார். அவருடைய கண்களும் ஏதோ எழுதிவைத்திருக்கும் செய்தியை பார்த்து பார்த்துப் படிப்பதுபோல் உள்ளது. அவர் பேசி முடித்தபிறகு இறுதியாக, நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி சொல்லிவிட்டேன்தானே? என்று கேட்பதுபோல் தலையசைக்கிறார்,' என்றும் நீதிமன்றத்தில் கூறினார். 


அப்போது குறுக்கிட்ட யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., தடய அறிவியல் நிபுணர்போல் பேசுங்கள். நீங்கள் மனோதத்துவ நிபுணர்போல பேசக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்தார். 


இதையடுத்து, கடந்த 1.2.2019ம் தேதி சாட்சியம் அளித்த நாமக்கல் மாவட்ட வட்ட வழங்கல் தனி வட்டாட்சியர் சந்திரமாதவனிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது. அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., கோகுல்ராஜ் கொலையான பிறகு அவருடைய குடும்பத்திற்கு அரசு இழப்பீடு கொடுத்தது. அது நிதித்துறையின் கீழ் வருகிறதா? என்றதற்கு தெரியாது என்று சந்திரமாதவன் கூறினார். 


'இந்த வழக்கின் 1ம் எதிரி (யுவராஜ்) ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது சிஐசிஐடி ஏடிஎஸ்பி எழுதிக் கொடுத்த காகிதத்தைப் பார்த்துதான் உதவியாளர் தட்டச்சு செய்தாரா?' என்றதற்கும், ஏடிஎஸ்பி குறிப்புகள் எழுதிய காகிதம் வாக்குமூலத்துடன் இணைக்கப்பட்டு இருந்ததா? எனக் கேட்டதற்கும் அவர் தெரியாது என்று பதில் அளித்தார். 


மேலும், காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் பொய் சாட்சியம் அளித்துள்ளீர்கள் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறினார். அதற்கு தனி வட்டாட்சியர் சந்திரமாதவன், தவறு என்று பதில் அளித்தார். 


இதையடுத்து சங்ககிரியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சாட்சியம் அளித்தார். அவர், 'குற்றவாளி கூண்டில் நிற்பவர்களில் யுவராஜ், தங்கதுரை ஆகியோரை மட்டும் எனக்குத் தெரியும். என் சகோதரர் செந்தில்குமாரிடம் வண்டியை வாங்கிச் சென்றவகையில் அவ்விருவரையும் தெரியும். மற்றபடி, இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் வீட்டுக்கும் யுவராஜ் வீட்டுக்கும் இடையே சுமார் 8 கிமீ தூரம் இருக்கும். வழக்கு தொடர்பாக காவல்துறையினர் என்னிடம் விசாரித்தார்கள். அப்போது, என்னிடம் இருந்து யுவராஜ் ஒரு ஜீப் வாகனத்தை எடுத்துச் சென்றார். அதுகுறித்து விசாரித்தனர்,' என்றார்.


அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, 'உங்களிடம் இருந்து பெற்றுச்சென்ற ஜீப் வாகனம் எத்தனை கிமீ தூரம் ஓடியிருக்கும்? என்று கேட்டார். அந்த வினாவை எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. கடுமையாக ஆட்சேபித்தார். அப்போது நீதிபதி இளவழகன், சார் இதெல்லாம் லீடிங் கொஷன் (பதிலுடைய வினா) இல்லை என்று ஆட்சேபணையை மறுத்தார். 


இதன் பின்னர், குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்த யுவராஜ், தங்கதுரை ஆகியோரை ராஜ்குமார் அடையாளம் காட்டினார். (நீதிபதியின் பார்வையில்) இடமிருந்து 6வது நபர் யுவராஜ் என்றும், 4வது நபர் தங்கதுரை என்றும் அடையாளப்படுத்தினார். பின்னர் அவரிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, உங்களிடம் இருந்து யுவராஜ் ஜீப்பை எடுத்துச் சென்றவர் என்னெனன வேலைகளுக்கு பயன்படுத்தினார் என்று தெரியுமா? என்று கேட்டார்.


அதற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே, 'இதற்குப் பெயர் குறுக்கு விசாரணை இல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? என்று நீதிபதியைப் பார்த்து கோபமாக கேட்டார். அதற்கு நீதிபதி, 'சார்... இது பதிலுடைய வினா இல்லை' என்றார். அதற்கு ஜிகே, அப்படியானால் அவர் சொல்வதையெல்லாம் கேட்டு நீங்களே பதிவு செய்து கொள்ளுங்கள் என சலிப்பாக கூறினார். பிறகு நீதிபதி, வேண்டுமானால் கேள்வி&பதிலாக பதிவு செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஜிகேவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வழக்கறிஞர் ஜிகே, ராஜ்குமாரிடம் சில கேள்விகளை குறுக்கு விசாரணையின்போது கேட்டார்.


அவரைத் தொடர்ந்து சதீஸ்குமார், செந்தில்குமார் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர். அவர்கள் இருவரும் பிறழ் சாட்சியம் அளித்தனர். இத்துடன் திங்கள்கிழமையன்று சாட்சிகள் விசாரணை முடிந்தது. இதையடுத்து, பிப்ரவரி 6, 2019ம் தேதிக்கு சாட்சிகள் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி இளவ-ழகன் உத்தரவிட்டார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 The court action decision for Husband jailed for sending video to wife

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயது மிக்க இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சிறிது நாளிலேயே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அந்த பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், கணவர் விவாகரத்து தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்த அந்த பெண் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, அந்த பெண் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது கணவர் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி, ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த பெண், இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் வசித்து வரும் தனது சகோதரரிடம் கூறியுள்ளார். அதன் பேரில், அந்த பெண்ணின் சகோதரர் பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த பெண், கணவர் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் தொடர்பானது குறித்து தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (19-03-24) நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. அதில், விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

Next Story

“எங்களை காப்பாற்றுங்கள்” - ரஷ்ய ராணுவத்தால் கதறும் இந்தியர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Indian tourists shouts Save us from Russia

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. 

அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள். 

அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர். 

ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.