Skip to main content

‘ஈஷாவுக்கு வந்தேன்.. மாட்டிக்கிட்டேன்..’ - இளம் நடிகையின் வீடியோ வைரல்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

video actress visiting Isha Center Coimbatore with her boyfriend going viral.

 

யாராச்சும் காப்பாத்துங்க.. என்கிட்டே இவன் தப்பா நடக்க ட்ரை பண்றான்.. என முகத்தில் காயங்களுடன் நடுரோட்டில் இறங்கி துணை நடிகை ஒருவர் கூச்சலிடும் வீடியோ காட்சிகள் மதுரையில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலை அருகே உள்ளது நேரு நகர் பிரதான சாலை. இங்கு வந்த இளம் ஜோடி சொகுசு காரின் உள்ளே இருந்தபடி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் இந்தியில் பேசிக்கொண்டு அடித்துக் கொண்டதை அப்பகுதியில் இருந்த மக்கள் கவனித்துள்ளனர். ஆரம்பத்தில், ஏதோ தனிப்பட்ட விவகாரம் என நினைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போயுள்ளனர். ஆனால், அடிதடியும் சத்தமும் அதிகரிக்கவே, கார் கதவை திறக்கச் சொல்லி என்ன பிரச்னை என மதுரை தமிழில் கேட்டுள்ளனர். அப்போது அந்த பெண் துணை நடிகை என்றும், அந்த இளைஞர் தன்னை வழக்கறிஞர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். 

 

“எதுவா இருந்தாலும் உங்க வீட்டுக்கு போய் பேசிக்கொள்ளுங்கள்.. இது பொதுவான இடம்.. இங்கே வைத்துக் கொள்ளாதீர்கள்” என எச்சரித்துள்ளனர். ஆனால், அந்த இளம் ஜோடியோ, ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் மழை பொழிந்துள்ளனர். இது என்னப்பா.. பெரிய சிக்கலா இருக்கும் போலவே என நினைத்த மக்கள், உடனடியாக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில், “உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியா மகள் அங்கீதா பட்டாச்சாரியாதான் இந்த பெண் என்பதும், அவர் துணை நடிகையாக இருந்து வருவதும் தெரியவந்தது. அதேபோல, உடனிருந்த இளைஞர் பீகார் மாநிலம் ராம்நகர் வெஸ்ட் பகுதியை சேர்ந்த மனோஜ் பாண்டேவின் மகனான நிதிஷ்குமார் என்பதும் தெரியவந்தது. மும்பையில் இருந்து இருவரும் மகா சிவராத்திரி திருவிழாவிற்காக கோவையில் நடைபெற்ற ஈஷா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து கோவையில் வாடகை கார் எடுத்து இருவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்க்க திட்டமிட்டு நேற்று மதுரையில் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறுதான் ரோட்டில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு வந்ததும் தெரியவந்தது. எதனால் தகராறு வந்தது என போலீசார் இருவரிடம் விசாரணை செய்ததில், “நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்தோம். ஆனால், தனது ஆண் நண்பர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்றும், அதோடு தனது பணத்தையும் எடுத்து கொண்டதாகவும் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறினார். பதிலுக்கு அந்த இளைஞரும் இவள் தவறான பெண் எனக் கூறினார். இருவரையும் விசாரணை செய்த காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன், இருவரிடமும் உடனடியாக தங்களது சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மும்பையில் இருந்து மதுரை வந்து ரோட்டில் நின்று சண்டையிட்ட துணை நடிகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்