Skip to main content

அடித்து கொலைச்செய்யத்தூண்டிய வாட்ஸ்-அப் வதந்திகள் - கமல் கண்டனம்

Published on 11/05/2018 | Edited on 12/05/2018
kamal act

 

 

சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  வடமாநில இளைஞர்கள் குழந்தைகளை கடத்துவதாக வரும் தகவல்களால் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.  

 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே  குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.

 

 திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று கருதிய கிராம மக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்ததில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை மேம்பாலத்தின் சுவரில் கட்டி தொங்கவிட்டனர்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில்  சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் பிடித்து அடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.  வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை, குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து சிலர் அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டனர்.   அவர், சென்னையைச் சேர்ந்த அமீர் என்றும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

 

 

சமூக வலைத்தளங்களில் வந்த வதந்திகளை உண்மை என்று நம்பி, சந்தேகிக்கும் நபர்களை கொலை செய்யும் அளவிற்கு மக்கள் சென்றுவிடுவதால் குழந்தைகடத்தல் பற்றி தவறான தகவல்களை பரப்புவோருக்கு காவல்துறையும், ஆட்சியர்களும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், மக்கள் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து,


’’வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது.  மக்கள் விழிப்புடன்  இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம்.  சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று.  காவல்துறையிடம் தெரிவிப்பதே  நமது பொறுப்பும் கடமையும் ஆகும்.’’என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் சித்தராமையா!

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

chief minister siddaramaiah put an end to rumours

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று  அறிவித்திருந்தது.

 

இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து முதல்வர் சித்தராமையா தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்கள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி அனைவரையும் சென்றடையும் வகையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் அமல்படுத்த உள்ள இலவச மின்சார திட்டம் சொந்தமாக வீடு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பொருந்தாது என்று மக்கள் மத்தியில் வதந்தி பரவியது.

 

இதையடுத்து இன்று முதல்வர் சித்தராமையா ட்விட்டரில், "வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டுக்கு கீழ் மற்றும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ரூ.2,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால் வருமான வரி செலுத்துவோர் மற்றும் ஜிஎஸ்டி பதிவு செய்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.