Skip to main content

'ஒவ்வொரு டெஸ்ட்டிலும் உதயநிதி சென்டம்'-முதல்வர் பாராட்டு

Published on 27/10/2024 | Edited on 27/10/2024
'Udhayanidhi buys centum in every test I give'-Multalvar praise

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'என் உயிரினும் மேலான...' எனும் தலைப்பில் பேச்சுப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதழில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''உலகப் புரட்சி, பிற்போக்குத்தனம் குறித்து பேசிய இயக்கம் திமுக. 95 வயது வரை தாங்க முடியாத வலியுடன் களத்தில் இருந்தவர் தந்தை பெரியார். துணை முதல்வர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு. அந்த பொறுப்பை உணர்ந்து உதயநிதி செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால் என்னை பொறுத்தவரை அந்த பொறுப்பை நான் அவருக்கு கொடுத்ததை ஒரு பயிற்சியாக கருதுகிறேன். அப்படி பார்க்கும்போது நான் வைக்கிற ஒவ்வொரு தேர்விலும் அவர் சென்டம் ஸ்கோர் செய்கிறார்.

கோவையில் நடைபெற்ற மாணவர் அணியினுடைய மாநாட்டில் கல்லூரி மாணவனாக நான் கலந்து கொண்டேன். ஏராளமான பேச்சாளர்கள் துரைமுருகன் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் அங்கு அமர்ந்திருந்தார்கள். அப்போது மாநாட்டிற்கு தலைமை வகித்தவரிடம் இரண்டு நிமிடம் சான்ஸ் கொடுங்க என கேட்டேன்.

துரைமுருகன் கேட்டிருந்தால் கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு இரண்டு நிமிடம் வாய்ப்பு கிடைத்தது. அன்று பேசியது இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல பதித்து வைத்து நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான மாணவர் பட்டாளத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளக்கூடிய அந்த வாய்ப்பை நீங்கள் எனக்கு உருவாக்கி தர வேண்டும். மொழிக்காக உயிரிழக்கக்கூடிய தியாகத்தை செய்யக்கூட நாங்கள் காத்திருக்கிறோம். என்னுடைய தந்தைக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த ஆண் பிள்ளைகளில் ஒருவன் போய்விட்டால் என் தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். அத்தகைய பெருமையை வாங்கித் தந்த மகிழ்ச்சி என்னை சேரும். எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று முழங்கினேன். மறக்க முடியாத நினைவுகள் அது.

கலைஞரின் ஏன் கொண்டாடப்படுகிறார் என்று சொன்னால் அதற்கான விடை தான் அவர் பேச்சு. என்னுடைய பேச்சுக்கு கலைஞர் என்ன சொன்னார் என்றால் 'நான் ஸ்டாலினை மட்டும்மல்ல ஸ்டாலினுடன் சேர்த்து இந்த நான்கு பிள்ளைகளை தியாகத்திற்கு வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன். நான் உழைத்து உழைத்து எழுதி சம்பாதித்த குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்த குடும்பத்தில் ஒரு ஸ்டாலின் அல்ல நான்கு பிள்ளைகளையும் நாட்டுக்காக போனாலும் பரவாயில்லை. ஆனால் ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் இருக்கிறீர்களே உங்களை நம்பி உங்களது பெற்றோர்கள் உங்களை படிக்க அனுப்பி இருக்கிறார்கள். முதலில் வீட்டைக் காப்பாற்றுங்கள் பின்னர் நாட்டை காப்பாற்றுங்கள்' என கலைஞர் சொன்னார். உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும் மாணவர்களை தூண்டிவிடும்படி அவர் பேசவில்லை. மாறாக அங்கிருந்த எல்லோருக்கும் வழி காட்டினார். அதனால்தான் அவர் தாயை விடவும் மேலானவர்'' என்றார்.

சார்ந்த செய்திகள்