Skip to main content

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; மூன்று இளைஞர்கள் பலி!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

Two wheeler accident three passes away


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் உள்ள காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன் (20). இவர், ஜனவரி 26ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி பஜார் பகுதிக்கு வந்துகொண்டிருந்தார். அதேபோல் கனவாய்ப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (19) மற்றும் அவரது நண்பர் மோகன் (26) ஆகிய இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் வெள்ளக்குட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். 

 

ஆலங்காயம் செல்லும் சாலையில் நேதாஜி நகர் பகுதியின் அருகே மேற்கண்ட இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வாணியம்பாடி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வெங்கடேசன் உயிரிழந்தார்.

 

சிவலிங்கம் மற்றும் மோகன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிக காயம் இருந்ததால், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சிவலிங்கம் உயிரிழந்தார். மோகன், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழுந்தார்.

 

சம்பவம் குறித்து வாணியம்பாடி நகரப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
 

 

 

சார்ந்த செய்திகள்