
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் வண்டியூர் காட்டுப் பகுதியில் இரண்டு கரடி தாக்கியதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
அப்பகுதியில் உள்ள வண்டியூரைச் சேர்ந்த தங்கராஜ். தனக்கு சொந்தமான தோட்டத்தில் இரவுக் காவலில் இருந்தார். அப்பொழுது அதிகாலை காட்டுப்பகுதிக்குள் இருந்து தோட்டத்திற்குள் நுழைந்த கரடி ஒன்று தங்கராஜை தாக்கியுள்ளது. அந்த நேரம், தனது ஆட்டிற்கு இலை, தளை பறிக்க தோட்டத்திற்குள் வந்த அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் அந்த கரடியால் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த தங்கராஜை மீட்க முயற்சி செய்தார்.
அப்போது காட்டுக்குள் மறைந்திருந்த மற்றொரு கரடி காப்பாற்ற சென்ற தங்கராஜை தாக்கியுள்ளது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கடியை விரட்டி விட்டு காயம்பட்டவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்ததின் பேரில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதியிடம் பேசிய போது...இந்த கரடி தாக்குதல் சம்பவம் இப்பகுதியில் இது தான் முதல்முறை. பொதுவாக, கரடி இரவு நேரங்களில் தான் வெளியே வரும். இந்த சம்பவம் கூட அதிகாலையில் தான் நடந்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு குழு ஒன்றை அமைத்திருக்கிறோம். அப்பகுதியில் ஆய்வு செய்துவருகிறோம். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார். இருந்தாலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.