Skip to main content

மக்களின் பயன்பாட்டிற்கு வருமா பாலம்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

trichy srirangam bridge reopen public expectation 

 

திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 1976 ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட பாலம் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வரையிலும் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது  இந்தப் பாலம் பழுதடைந்ததால் ரூ. 6.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாலம் முற்றிலும் மூடப்பட்டு போக்குவரத்தானது சென்னை பைபாஸ் சாலை வழியாகச் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்குச் சுற்றிச் செல்லும் நிலை நீடித்து வருகிறது.

 

இந்நிலையில், தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் அருகே உள்ள மற்றொரு பழைய பாலத்தில் இருசக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்தப் பழைய பாலமானது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு 1976 வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. இப்பாலம் அப்பொழுது பழுதடைந்த காரணத்தால் மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்தப் பாலத்தை மீண்டும் புனரமைத்து இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், பாலத்தைத் திறப்பது குறித்து அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்தப் பாலத்தின் ஒருபுறம் திருவெறும்பூருக்குச் செல்லும் குடிநீர்க் குழாயும் மற்றொரு புறம் கழிவுநீர்க் குழாயும் செல்வதால் இதற்கு இடையில் இரண்டு மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. எனவே ஒரு வழிப் பாதையாக இருசக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்