அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் புகழேந்தி. இவர் பேசிய ஆடியோ ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 14 ஆண்டுகளாக முகவரி இன்றி இருந்தவர் டிடிவி தினகரன். அவரை இந்த ஊருக்கு தெரியப்படுத்தி போராட்டம் எல்லாம் செய்தேன். ஜெயலலிதா மரணம் அடைந்த போது கூட, அவர் இல்லை என்று தனது கட்சியினரிடம் பேசியுள்ளார். இதன்மூலம் அமமுக தலைமை மீது புகழேந்திக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே செந்தில்பாலாஜி, தங்கதமிழ்செல்வன், புதுக்கோட்டை பரணி கார்த்திகேயன் இணைந்த நிலையில் தற்போது புகழேந்தி குறித்த ஆடியோ, வீடியோ குறித்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் திருச்சியில் புதுக்கோட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளை வரவழைத்து திருச்சியில் கூட்டம் நடத்தினார்.
![TRICHY AMMK PARTY MEETING TTV DHINAKARAN SPEECH](http://image.nakkheeran.in/cdn/farfuture/BP1LtcJ6OkZDV8tl0INFJAYNSQ5OmISKoLAP7XRdqHE/1568130000/sites/default/files/inline-images/TTV7.jpg)
அந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன். சமூக வலைதளங்களில் யாரோ பதிவு செய்யும் தகவல்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. எல்லோரும் நம்முடன் இருக்கிறார்கள், ஒரு சிலர் வெளியே செல்வதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. துரோகம் செய்தவர்களை எதிர்த்து போராடி, அம்மா வழி நடத்திய கட்சியை மீட்பதே அமமுகவின் நோக்கம் என்று கட்சியினருக்கு உற்சாகத்தை தரும் வகையில் உருக்கமாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார். மேலும் அமமுக கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. பழுத்த மரம் கல்லடிப்படும் என்பதுபோல் நம்மை பற்றி விமர்சனங்கள் செய்து வருகின்றன.
இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஆர்.மனோகர், ராஜசேகரன், மற்றும் அமைப்பு செயலாளர் சாருபால தொண்டைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் வெளியே பத்திரிகையாளர்களிம் பேசும் போது, வீடியோ பேச்சு பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். நானும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். யார் மீது தவறு இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லோரும் கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஒரு சிலர் செல்கின்றனர். சுயநலம், தனிப்பட்ட காரணங்களுக்காகச் செல்கின்றனர். அதற்காக என்ன செய்ய முடியும்? இதனைத் துரோகம் என்று நான் சொல்லவில்லை. இத்தனை நாள் எங்களுடன் இருந்தனர். ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் தீர விசாரித்து எடுக்கப்பட்டவை. அதே போன்று, இதனையும் தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.