
தமிழகத்தில் கரோனா 2வது அலை வீச ஆரம்பித்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்துள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதேவேளையில் அரசுப் பேருந்துகள் தனியார் பேருந்துகள் என அனைத்தும் அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், பேருந்துகளின் பயண அட்டவணையும் மாற்றப்பட்டு மக்கள் அனைவரும் பகல் நேரங்களில் பயணிக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பொதுமக்களின் பயணம் மிகக்குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் திருச்சி மண்டல அளவில் 120 பேருந்துகளின் சேவையைப் போக்குவரத்துத் துறை ரத்து செய்துள்ளது.

கோடைக் காலத்தில் பயணிகள் அதிக அளவில் பேருந்தில் பயணம் செய்வதை தவிர்த்து வருவதால் இரவு நேரப் பயணத்திற்குப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த இரவு நேர ஊரடங்கால் போக்குவரத்துத் துறைக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு தற்போது ஏற்பட ஆரம்பித்துள்ளது. எனவே பகல் நேரங்களைவிட இரவு நேரங்களில் அதிக பேருந்துகளை இயக்க பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.