
ஈரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் 28ந் தேதியான இன்று மதியம், ஈரோடு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பல்வேறு தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி ஜெகநாதன் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் நடராஜன், துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “195 சதவீத அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவைத் தொகையை 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்.
போக்குவரத்து ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை விரைவாக வழங்க வேண்டும். பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டிய ரூபாய் மூன்று லட்சத்தைத் தாமதமில்லாமல் வழங்குவதுடன் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறும் பெண்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்”என பல்வேறு கோரிக்கை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.