Skip to main content

மகனைக் காப்பாற்றிவிட்டுத் தாய் உயிரிழந்த சோகம்!

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Tragedy of mother passed away after saving her son

 

கல்வராயன் மலையை ஒட்டியுள்ள சங்கராபுரம் அடுத்த லக்கி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி 30 வயது வள்ளி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று வள்ளி தனது மகனுடன் அதே ஊரைச் சேர்ந்த ராதிகா என்பவருடன் சேர்ந்து கொடியனூர் அருகே ஓடும் முஸ்கந்தா ஆற்றில் குளிப்பதற்குச் சென்றுள்ளார். வள்ளி துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் திடீரென தண்ணீரில் தவறி விழுந்துள்ளார்.

 

தண்ணீரில் விழுந்த மகன் தத்தளிப்பதைக் கண்ட வள்ளி மடக்கிப் பிடித்து மகனைக் காப்பாற்றிக் கரையில் நின்றிருந்த ராதிகாவிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் திடீரென நீரின் வேகம் அதிகரித்த நிலையில், வள்ளிக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றுத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். மகனை மீட்டுக் கொடுத்துவிட்டு தாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தகவலை ராதிகா ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

 

பின்பு தகவலின் பேரில் வட பொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளியைத் தீவிரமாகத் தேடியதில் இறுதியில் சடலமாக மீட்கப்பட்டார். வள்ளியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்