
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் விண்ணைத் தொடும் அளவுக்கு ரூ. 130 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளியின் பயன்பாடுகளைக் குறைத்துவிட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ. 120 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காமராஜரின் 121வது பிறந்தநாள் மற்றும் விசிக தலைவர் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியரின் நினைவுநாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி தலைமையில் கட்சியினர் ஈரோடு ஜி.எச் ரவுண்டானாயில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து மற்ற கட்சியினரும் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கும், அங்கிருந்த பெண்களுக்கும் இனிப்புக்கு பதிலாக தக்காளிகளை வழங்கினர். இதைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தக்காளி விலையேற்றத்தை பொதுமக்கள் உணரும் வகையில் பொதுமக்களுக்கு தக்காளி வழங்கப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.