
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5,849 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரேநாளில் 1,171 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 19 ஆவது நாளாக இரண்டாயிரத்துக்கும் குறைவான கரோனா எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 89,561 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 51,765 பேர் தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்து, வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை என்பது 1,31,583 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் படி 74 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை விடுபட்ட உயிரிழப்புகள் 444 சேர்த்து கரோனா உயிரிழப்பு 518 பேர் என கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 3,144 ஆக அதிகரித்துள்ளது. விடுபட்ட அந்த 444 உயிரிழப்பில் ஒரு சிலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று இறந்த 74 பேரில், 50 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 24 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் இறந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பில்லாத 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 53 வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை என்பது தொடர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அதிகபட்சமாக சென்னையில் 1,939 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 210 பேரும், திருவள்ளூரில் 180 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் 74, மதுரை 124, ராமநாதபுரம் 53 என உயிரிழப்பு உள்ளது. அதேபோல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் இதுவரை 1,205 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் என்பது 1.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் ஒரே நாளில் 4,678 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 430 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.