Skip to main content

உணவு டெலிவரி செய்யும் இளைஞர் எரித்து கொலை!

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

Tirunelveli youth passed away in viluppuram

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் விராட்டிகுப்பம் எனும் பகுதி உள்ளது. இப்பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில், நேற்று காலை சாலையோரம் ஒரு இருசக்கர வாகனம் நீண்ட நேரம் நிற்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின்படி, டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் அந்த இருசக்கர வாகனம் நின்ற இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

 

வாகனம் நின்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்தனர். 

 

அவர்கள் அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டதில், உடல் கிடந்த இடத்தின் அருகில் சிதைந்த செல்போன், ஒரு பர்ஸ் ஆகியவை கிடந்துள்ளன. அதில் ஆதார் உள்ளிட்ட சில அடையாளங்கள் இருந்துள்ளன. அதன் மூலம் எரிக்கப்பட்ட வாலிபர் திருநெல்வேலி மாவட்டம், சோலைசேரியை சேர்ந்த ஆபிரகாம் சாலமன் ராஜா என்பவரின் மகன் பெஞ்சமின் ஆபிரகாம்(28) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு போலீசார் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

 

அதன்பிறகு போலீஸார் நடத்திய விசாரணையில், பெஞ்சமின் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்ததுள்ளார். அங்கிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் விழுப்புரம் நெடுஞ்சாலை அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. 

 

அவரது சடலத்தை மீட்ட போலீசார், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டது எப்படி? அவருக்கு யாராவது விரோதிகள் இருக்கிறார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.