Skip to main content

மாதா மாதம் மூன்று அரசு சம்பளம்... ஆனால் நபர் ஒருவரே... இதுவும் நம் இந்திய திருநாட்டில் தான்...

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

அரைக் காசு சம்பளமுனாலும் அது அரசாங்க உத்யோகமாக இருக்க வேண்டும் என்பது நமது வட்டார வழக்கு. அந்த வகையில் அரசுப்பணி என்பது பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில், பீகார் மாநிலத்தில் ஒரே நபர்  மூன்று அரசு வேலைகளில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி மாதா மாதம் மூன்று சம்பளமும் பெற்றுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மை. 
 

new 2000 rs



இந்தியாவை பொறுத்தவரை அரசு வேலை அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. பலருக்கும் அது சவால் நிறைந்தது. அரசுப் பணியை தமது இலக்காக கொண்டு பலரும் உயிரைக் கொடுத்து படித்து வருகின்றனர். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான் அந்த நபர்  மூன்று அரசு வேலைகளில் பணியாற்றியிருக்கிறார். 
 

அவர் பெயர் சுரேஷ்ராம். சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்தபோதுதான் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அந்த சுரேஷ் ராம் மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துள்ளார். அதே போல் அந்த மூன்று துறைகளி லிருந்தும் அவர்  சம்பளம் பெற்றுள்ளார்.

அரசுத்துறைகளில் ஒரே பெயர் கொண்ட நபர் பணியாற்றுவது இயல்பானது என்றாலும், ஒரே பெயர், ஒரே விலாசம் இதில் இருந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட சுரேஷ் ராமை தகுந்த ஆதாரங்களுடனும் ஆவணங்களுடனும் வந்து துறை சார்ந்த அதிகாரிகளை சந்திக்கச் சொல்லி இருக்கிறார்கள், பீகார் மாநில உயரதிகாரிகள், இந்த சுரேஷ்ராம்  வெறும் பான் கார்டு, ஆதார் கார்டுடன் சென்று அவர்களை சந்தித்துள்ளார். இதனை அடுத்து, அதிகாரிகள்  பணி தொடர்பான ஆவணங்களை எடுத்து வரச்சொல்லி அனுப்பியுள்ளனர்.
 

இதில்  உஷாரன சுரேஷ் ராம், தலைமறைவானார். இதன் பிறகு , போலீசார் மூலம் அவர் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.  தற்போது விசாரணை நடக்கிறது. இந்த சுரேஷ் ராம் பீகார் மாநில அரசின் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர், பங்கா எனும் மாவட்டத்தில் நீர் மேலாண்மைத் துறையில் ஒரு அரசு அதிகாரியாகவும், அடுத்து பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியாகவும் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி மூன்று சம்பளம் வாங்கியுள்ள சுரேஷ் ராம், பல பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார்.
 

விசாரணைக்குப் பின்னரே அவர் எப்படி ஏமாற்றி மூன்று அரசு  வேலை வாங்கியுள்ளார்; மூன்று அலுவலகத்திலும் ஒரு சேர எப்படி பணியாற்றியுள்ளார் என்ற விபரம் வெளியாகும் என கூறுகிறார்கள் பீகார் மாநில அதிகாரிகள்.
 

பல ஆசாமியான சுரேஷ்ராம், பற்றித்தான் பீகார் மாநில அரசு ஊழியர்கள் வியந்து பேசுகிறார்கள்.
 


 

சார்ந்த செய்திகள்