![Thoothukudi Srivaikundam Mutharamman Temple Street Cooperative Bank Secretary Sreedharan incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/42vWWDc5nGREdnljZj9tuNrfqEnA6r71u61gKo7rlyI/1723561386/sites/default/files/inline-images/bank-art_0.jpg)
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோவில் தெருவில் தூத்துக்குடி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சிக்கன நாணய சங்கம் என்ற கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 52) என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியில் ஸ்ரீதரனுக்கு உதவியாகத் தற்காலிக பணியாளராகப் பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். இந்த வங்கியுடன் இ - சேவை மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த இ - சேவை மையத்தில் ஒரு பெண் ஒருவரும் வேலை செய்து வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் இன்று (13.08.2024) மதியம் 2 மணியளவில் இ - சேவை மையத்தில் உள்ள பெண் பணியாளரும், கூட்டுறவு வங்கியின் உதவியாளரும் மதிய உணவிற்காக வெளியில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் வங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த ஸ்ரீதரன் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும் தீ விபத்து காரணமாக வங்கியில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இந்நிலையில் போலீசாரும் இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் முக்கிய திருப்பமாக வங்கியில் இருந்து ஒரு பாட்டிலில் பெட்ரோலும், அதன் அருகே தீப்பெட்டியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஸ்ரீதரன் எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தாரா?. அல்லது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருவர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.