மாட்டிறைச்சி விவகாரம், முத்தலாக் மசோதா போன்ற சட்டங்களை கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து அடுத்த ஆண்டு ஜூலை 7, இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை மீட்பு போராட்டத்தை நடத்தப்போவதாக தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் கூறினார்.
![thiruvarur islam people meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/3KCpYjBXSlCPNEiC16bGPYEeOXVQys7zEhx-qbriX4I/1569821386/sites/default/files/inline-images/ghfh.jpg)
திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு மாவட்ட மாநாடு பழைய நாகை சாலையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவ்வமைப்பின் துணைத்தலைவர் அப்துல் ரகுமான் ,’’ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார்.இதனை உடனடியாக தமிழக அரசு 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து மாட்டிறைச்சி விவகாரம், முத்தலாக் போன்ற சட்டங்களை கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிராக வருகின்ற 2020 ஆண்டு ஜூலை மாதம் இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை மீட்பு போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும். மேலும் குஜராத், உத்தரப்பிரதேசம் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடியில் மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு பணிகளை நடத்த வேண்டும்’’ என தெரிவித்தார்.