Skip to main content

திருந்தி வாழ்ந்த நபர் படுகொலை; பட்டப் பகலிலேயே பரபரத்த திருவான்மியூர்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Thiruvanmiyur is bustling with incident

சென்னை திருவான்மியூரில் பட்டப்பகலில் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (35). இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார். ரவுடியாக இருந்த டில்லி பாபு திருந்தி சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

பேட்டரி வாகனம் மூலம் குப்பைகளைச் சேகரித்துக் கொண்டு செல்லும் பணியை இவர் மேற்கொண்டு வந்தார். இன்று வழக்கம்போல பணியை முடித்துவிட்டு பேட்டரி வாகனத்தை விடுவதற்காக திருவான்மியூர் எல்.வி. சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மறைந்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவருடைய வாகனத்தை இடைமறித்து அவரைக் கீழே இறக்கி சரமாரியாகக் கத்தியால் வெட்டி பட்டப் பகலிலேயே படுகொலை செய்துவிட்டுத் தப்பித்தனர்.

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த டில்லிபாபுவை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த டில்லி பாபுவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற நபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. டில்லி பாபு ரவுடியாக இருந்து திருந்தி தற்பொழுது தூய்மைப் பணியாளராக ஒப்பந்தப் பணியில் இருந்த நிலையில், அருண் செய்யும் தவறுகளை காவல்துறைக்கு இவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்கனவே இருந்த முன்விரோதம் அதிகரித்துள்ளது. இந்த முன் விரோதத்தின் காரணமாக டில்லி பாபுவை அருண் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக நவீன், குபேரன் ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அருண் உள்ளிட்ட மற்ற ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருவான்மியூரில் பட்டப் பகலிலேயே தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.