
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் ராஜா என்பவர் குளிர்பானம் மற்றும் மளிகை கடை நடத்திவருகிறார். ஜூன் 25 ந்தேதி மதியம் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்துள்ளார். அங்கு வந்த ஒருவர் நான் காவல் துறையை சேர்ந்தவன் எனச்சொல்லி, ஏன் கடையை மூடாமல் திறந்து வைத்திருக்க எனக் கேட்டு அங்கிருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் அது உடைந்துள்ளது, உடனே கடையை மூடணும் என எச்சரித்துவிட்டு சென்றுள்ளார். வந்தவர் சீருடையில் இல்லாமல் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு தனக்கு தெரிந்தவர்களிடம் தகவலை கூறியுள்ளார். அவர்கள் எஸ்பி தனிப் பிரிவுக்கு தகவல் கூறியுள்ளனர். அங்கு வந்த ஓர் கீழ்நிலை காவலர். கடையில் இருந்த சிடிவி கேமரா பதிவை பார்க்க, எடை இயந்திரத்தை தள்ளிவிட்டவர் உமராபாத் காவல் நிலைய தலைமை காவலர் ரகுராமன் என்பது தெரியவந்தது.
இதுபற்றி அவர் உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை செய்ய அவர், தான்தான் அங்கு சென்று கடையை அடைக்க சொன்னேன் எனக்கூறியுள்ளார். விதியை மீறி இருந்தால் வழக்கை பதிவு செய்திருக்கலாம் அதை விட்டுவிட்டு அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது ஏன் என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டார்.
அந்த கடையில் இருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கி வீசி எரிந்ததில் இயந்திரம் சேதமடைந்தது. அதனை அறிந்த எஸ்.பி விஜயகுமார், ஜூன் 26 ந்தேதி காலை சம்பவம் நடந்த கடைக்கு சென்று, கடை உரிமையாளர் ராஜா என்பவரை சந்தித்து நடந்ததை பற்றி விசாரித்தவர், புதிய எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை வழங்கினார். இது பரவலான பாராட்டுதலை பெற்றுள்ளது.