Skip to main content

எருக்கம்பால் கொடுத்து பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய், பாட்டி கைது!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மொட்டனூத்து ஊராட்சி ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் - கவிதா தம்பதியினருக்கு பிறந்த ஆறு நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு எருக்கம்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 Theni andipatti female child incident - mother grandmother arrested

 



ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் கவிதா தம்பதியர்களுக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சுரேஷ் கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களது பத்து வயதான முதல் மகள் பாண்டி மீனா 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் ஹரிணி 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கவிதா மூன்றாவது முறையாக கர்ப்பமாகி பிரசவத்திற்காக கடந்த 20-ந்தேதி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ம்தேதி கவிதாவுக்கு சுகப் பிரசவம் ஆகி பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டு நாட்கள் கழித்து  தாயும், குழந்தையும் தங்கள் சொந்த வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2.3.2020 கவிதா கோழிக்கறி சாப்பிட்டதாகவும், நிலக்கடலை சாப்பிட்டதாகவும் அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது அதிகமாகி குழந்தை இறந்துவிட்டதாக கூறி குழந்தையை வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

இது குறித்து ரகசிய தகவல் கிடைத்து மாவட்ட குழந்தை நலம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திர சேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாசில்தார் சந்திரசேகர் மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் தேவியிடம் இதுகுறித்து விசாரணை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் தேவி ராமநாதபுரத்திற்கு சென்று கவிதாவிடம் அவருடைய மாமியார் செல்லம்மாளிடமும் விசாரணை நடத்தி உள்ளார். விசாரணையின் போது இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் கவிதா மற்றும் அவருடைய மாமியார் செல்லம்மாள் ஆகியோரை ராஜதானி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஆண்டிபட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சாகுல் அகமது மற்றும் சவரிமம்மாள் தேவி ஆகியோர் முன்னிலையில் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கவிதா மற்றும் அவருடைய மாமியார் செல்லம்மாள் ஆகியோர் மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதி எருக்கம் பால் ஊற்றி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகர் முன்னிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக கவிதா அழைத்து வரப்பட்டார். கவிதா அடையாளம் காட்டிய இடத்தில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவர் ராஜபாண்டியன் பிரேத பரிசோதனை மேற்கொண்டார். அதனையடுத்து பெண் சிசுக் கொலை செய்த தாயார் கவிதா மற்றும் மாமியார் செல்லம்மாள்  ஆகியோரை ராஜதானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதே போல் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி அடுத்து இருக்கும் புள்ளநெரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் அவருடைய மனைவியும் சேர்ந்து பிறந்த பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யதனர். அதைதொடர்ந்து  மற்றொரு சிசு கொலை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.