Skip to main content

போதை நபரின் இரு சக்கர வாகனம் அபேஸ்; வைரலாகும்  சிசிடிவி காட்சி 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Theft of a two-wheeler from an intoxicated person; Police investigate with CCTV footage

மித மிஞ்சிய மதுபோதையில் இருசக்கர வாகனத்தின் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்தவரை கீழே தள்ளி விட்டுவிட்டு இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் நிலையத்தில் ஒருவர், தான் போதையில் இருந்த நேரத்தில் தன்னுடைய பைக் திருடப்பட்டதாக புகார் அளித்திருந்தார். கோதைமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு மதுபோதையில் தன் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து பெட்ரோல் டேங்கின் மீது தலைவைத்தபடி படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த இளைஞர் ஒருவர், போதையில் இருப்பதை உணர்ந்து அவரை இருசக்கர வாகனத்தோடு கீழே தள்ளிவிட்டார்.

கீழே தள்ளிவிட்டதைக் கூட சுதாரிக்க முடியாத அளவிற்கு போதையில் அந்த நபர் இருப்பதை உணர்ந்த இளைஞர், பின்னர் லாவகமாக இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றார். இது தொடர்பான காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் அடிப்படையில் போதை ஆசாமியிடமிருந்து பைக்கை திருடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Scythe cut to a pmk figure in Cuddalore

திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கின்ற சிவசங்கர். கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நிலையில் கடலூர் நகர முன்னாள் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் சனிக்கிழமை(6.7.2024) மாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மரர்ம நபர்கள்  இவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சல் இடவே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்பொழுது சங்கருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயம் உள்ள நிலையில் அவருக்கு தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டிப்பாளையம் பகுதியில் ஒரு கொலை சம்பவம் நடந்த நிலையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சங்கரின் ஆதரவாளர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால் கடலூரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையிலும் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் தம்பி பாமக பிரமுகர் பிரபுவை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சதீஸ், தங்கபாண்டியன், வெங்கடேசன் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர் பிரபுவின் அண்ணன் சங்கர். இதனால் இவர் இன்று வெட்டி படுகொலை செய்ய இருந்ததாக போலீசாரின் விசாரணையில் முதற்கட்ட தகவலாக உள்ளது.

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை; 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
15-day court custody for 8 people in the Armstrong case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே(5.7.2024), பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி நாளை சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். 

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடலை கட்சி அலுவலகத்தில் அடைக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.  

இதனைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதியளித்ததால் இன்றிரவே நீதிபதி அனிதா சுமந்த் வீட்டில் விசாரணை நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால்,  இந்த வழக்கு நாளை காலை 8.30 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் தலைமையில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களை எழுப்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 8 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையினர் 8 பேரிடம் விசாரணை நடத்தி கொலைக்கான காரணம், பின்புலம் என்று முழு தகவலையும் பெற்று நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.