
நேற்று (10/08/2021) காலைமுதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்தது.
கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவில் முடிந்த நிலையில், இரண்டாவது நாளாக தற்போது மீண்டும் சோதனை துவங்கியுள்ளது. இந்நிலையில், இந்த சோதனை தன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ''இந்த சோதனை என் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி. நியாயத்தின் பக்கம் நின்று எனக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஆதரவாக நின்ற ஓபிஎஸ், இபிஎஸ்க்கு நன்றி. சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு எனது நன்றி'' என தெரிவித்துள்ளார்.