Skip to main content

நல்லாசிரியர் விருது பெறும் தமிழர்கள்; ஆளுநர் தமிழிசை வாழ்த்து

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

Tamils ​​who get the best teachers award; Congratulations to Governor Tamilisai
கோப்புப் படம் 

 

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரைக் கவுரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் இந்த விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்பவரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க உள்ளார்.  

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வாங்குவதைத் தொடர்ந்து அவர்களுக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நல்லாசிரியர் விருது பெறும், காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் மாலதி ஆகியோருக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கும், தென்காசி மாவட்டம், கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்