
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி (தூத்துக்குடி), மதுக்கூர் (தஞ்சை) தலா 3 செ.மீ., பட்டுக்கோட்டை (தஞ்சை), எட்டயபுரம் (தூத்துக்குடி), காரியாபட்டி (விருதுநகர்), தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.