Skip to main content

“ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்திருக்கிறோம்” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Tamilisai Soundararajan condoles vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த செய்தியறிந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும், விஜயகாந்த்தின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குவிந்திருந்த பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, விஜயகாந்த்தின் உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், மறைந்த விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஒரு துணிச்சல்மிக்க தலைவராக இருந்த விஜயகாந்தை பார்ப்பதற்காக இதே அலுவலகத்திற்கு நான் வந்திருக்கிறேன். ஆனால், எனது வாழ்நாளில் அவரை உடலை பார்ப்பதற்காக இந்த அலுவலகத்திற்கு நான் வருவேன் என்று நினைக்கவே இல்லை. அவரது இழப்பு யாராலும் தாங்க முடியாத ஒன்றாகும். அவர் இன்னும் பல உயரத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவரது உடல்நிலை அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அவரது தொண்டர்களுக்கு, அவரின் இழப்பை தாங்கக் கூடிய மனதைரியத்தை கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்திருக்கிறோம்.” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்