Skip to main content

ஹிந்தி கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசு; வலுத்த எதிர்ப்பால் புதிய நடவடிக்கை

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Tamil Nadu Govt. Hindi Compulsory; New action due to strong opposition

 

தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள்தொடர்புத் துறை சார்பில் நேற்று  நாளிதழ்களில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு கவுரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் கல்வித் தகுதியில் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களில் முதுநிலை அல்லது M.Phil பட்டம் பெற்றவர்கள் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

Tamil Nadu Govt. Hindi Compulsory; New action due to strong opposition

 

இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விளம்பரத்தின் புகைப்படத்தினை தனது ட்விட்டரில் பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தார். எம்.பி. சு.வெங்கடேசனின் ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்நிலையில் அறிவிப்பு மீளப்பெறப்படுவதாக தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிர்வாக காரணங்களுக்காக 21/06/2023 அன்று நாளிதழ்களில் வெளியிடப்பட்ட தற்காலிக பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு விளம்பரம் எண்: செ.ம.தொ.இ/682/வரைகலை/2023 இதன்படி மீளப்பெறப்படுகிறது என்பது அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் வேலைவாய்ப்பு குறித்து நேற்று வெளியிடப்பட்ட விளம்பரம் மீளப்பெறுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்