Skip to main content

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
Tamil Nadu fishermen incident due to Sri Lankan Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதே சமயம் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். அதோடு கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நாகை மாவட்டம் செரூர் மீனவ கிராமத்தில் இருந்து மீனவர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் (09.09.2024) மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அந்த வகையில் தர்மன் என்பவரின் பைபர் படகில் சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன் மற்றும் சதீஸ் ஆகிய  4 மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி இந்த மீனவர்கள் 4 பேரும் கோடியக்கரையில் இருந்து தென் கிழக்கே நேற்று (10.09.2024) மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது இலங்கை கடற்படை அதிகாரிகள் அங்கு வந்து, அவர்களின் கப்பலைக் கொண்டு நாகையைச் சேர்ந்த மீனவர்களின் படகு மீது மோதவிட்டுள்ளனர். இதனால் மீனவர்களின் பைபர் படகு நடுக்கடலில் முற்றிலுமாக கவிழ்ந்தது. அந்த படகில் இருந்த 4 மீனவர்களும், கடலில் தத்தளித்தபோது மீனவர்களுக்கு எவ்வித முதலுதவியும் செய்யாமல் இலங்கை கடற்படையினர் அவர்களின் கப்பலில் மீனவர்களை ஏற்றி அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அங்கிருந்த மீனவர்களின் படகுக்கு அருகிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று (11.09.2024) காலை கரை திரும்பிய மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் நாகை மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்திய தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின்  தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்